புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக கோவை வ.உ.சி மைதானத்தில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தமிழகத்தில் முதன்முறையாக இரவு நேர பெண்களுக்கான நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐஜி அஜய்பரதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

3கி.மீட்டர், 5கி.மீட்டர் மற்றும் 10கி.மீட்டர் மற்றும் 21கி.மீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டி வ.உ.சி மைதானத்தில் துவங்கி ஆர்.டி.ஓ சாலை, ரேஸ் கோர்ஸ்,திருச்சி சாலை வரை சென்று மீண்டும் அதே இடத்தில் முடிவடைந்தது.

இரண்டரை வயது குழந்தைகள் முதல் 97 வயது முதியோர்கள் வரையிலான மாற்றுத்திறனாளிகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை .