சென்னையில் இருந்தவாறு காணொளி வாயிலாக திருச்சி, மதுரை டைடல் பூங்கா பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாகவும், இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
வேலூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்ட சூழலில், திருச்சி, மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்தது. கிட்டத்தட்ட டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் இளைஞர்கள் பலரும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக திருச்சி, மதுரை டைடல் பூங்கா பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. திருச்சியை பொறுத்தவரை திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் 14.16 ஏக்கரில் ரூ.315 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மதுரையை பொறுத்தவரை மாட்டுத்தாவணி அருகே 9.97 ஏக்கர் நிலத்தில் டைடல் பார்க் அமையவுள்ளது. ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளது. இரு கட்டங்களாக அமையவுள்ளது. இதன் மூலமாக சுமார் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
டெண்டர் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் பிப்.13ஆம் தேதி திருச்சி, மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னையில் இருந்தவாறு காணொளி வாயிலாக டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய பின் உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்