திண்டிவனத்தில் ஏசி இயந்திரத்தில் கேஸ் கசிந்து 3 பேர் பலியான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அருகே காவேரிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜி, இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு கோவர்த்தனன், கவுதமன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கவுதமனுக்கு வரும் ஜூன் 6ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளில் குடும்பம் பிஸியாக இருக்க, ராஜூ, மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் நேற்று முன் தினம் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு அறையில் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு இயந்திரம் வெடித்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். சப்தம் கேட்டு கோவர்த்தனனும் அவரது மனைவியும் ராஜூவின் அறைக்கு சென்றதில் அவர்களும் மயங்கி விழ, இருவரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஜூவின் உடலில் ரத்தக் கறை இருந்ததால் இது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ராஜூவுக்கு அதிக சொத்து இருப்பதால் சொத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஏசி இயந்திரம் வெடித்துதான் மூவரும் இறந்தாரா என கண்டறிய ஏசி பழுது நீக்கும் நிபுணர் கொண்டு ஆராயப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மூன்று பேரும் ஏசி வெடித்து பலியாகவில்லை என்றும் யாரோ கொலை செய்துவிட்டதாகவும் கலைச்செல்வியின் சகோதரர் ஜெயசங்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயசங்கர் கூறுகையில் எனது அக்கா குடும்பத்தினர் இறந்தது விபத்தல்ல. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். எனவே எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.