/indian-express-tamil/media/media_files/2025/09/03/dindivanam-cpm-2025-09-03-20-29-44.jpg)
திண்டிவனம் நகராட்சி விவகாரம் - நாளை சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் முனியப்பன் என்பவர், திமுக பெண் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழ வைக்கப்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) நாளை (செப்டம்பர் 4) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் முனியப்பன் என்பவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நகராட்சி ஆணையர் அறையில் கவுன்சிலர் ரம்யா அமர்ந்திருக்க, முனியப்பன் அவரது காலில் விழுந்து தலை மீது அடித்துக்கொண்டு அழுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ 1.30 நிமிடங்கள் ஓடுகிறது.
புகாரும், கண்டனமும்
இந்த சிசிடிவி காட்சி கசிந்த நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள், "பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பனை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் மற்றும் நகராட்சி மேனேஜரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை கண்டித்து, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்த செயலில் ஈடுபட்ட நகர்மன்ற தலைவரின் கணவர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.