திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்ததாவது; வரும் 26ம் தேதி(நாளை), நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில், 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களில் மேற்கூரை அமைத்தல் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. ரூ.40,000 கோடி செலவில் 550 பாரத் ரயில் நிலையங்களில் உள்ள கூரைகள் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை பிப்ரவரி 26 ஆம் தேதி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும் 2,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்களில் சுமார் 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.அதன்படி, திருச்சி கோட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு ஸ்டேஷன்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வரும் 26ம் தேதி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நான்கு ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. விருத்தாசலம் ஸ்டேஷன் 9.17 கோடியில், திருவண்ணாமலை ரூ8.17 கோடி, திருவாரூர் ரூ8.69 கோடி, கும்பகோணம் ரூ 120.67 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்பாதிபுலியூர், மணக்கால், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை, சஞ்சீவி நகர், ஆலத்துார், வில்லியனுார் ஆகிய ஏழு இடங்களில் ரூ.224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த பணிகளை மார்ச் மாதத்தக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 91.11 கோடியில் பணிகள் முடிந்த 26 தரைமட்ட பாலங்களை திறந்து வைக்கிறார். திருச்சி கோட்டத்தில், ரயில் தண்டவாளப் பகுதியில் கால்நடைகளை நடமாட விடுவதும், அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதும் அதிகம் நடக்கிறது. இதனால், ரயிலுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இதை பொதுமக்கள், பயணிகள் தவிர்க்க வேண்டும்.
திருச்சி– விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் வழித்தடத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, 321 வழக்கு பதிவாகி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாளை திருச்சி கோட்டத்தில் நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாக்களில் திருச்சி பாஜக பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“