'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை' - திருச்சி சிவா
DMK Rajya Sabha member Tiruchi Siva on Kendriya Vidyalayas Tamil News: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் தற்போது கற்பிக்கப்படாதது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
DMK Rajya Sabha member Tiruchi Siva on Kendriya Vidyalayas Tamil News: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் தற்போது கற்பிக்கப்படாதது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
Tiruchi Siva Tamil News: இந்தியா முழுவதும் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 6 வகுப்பு வரை மாநில மொழிகளைப் படிக்கலாம். ஆனால், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் விருப்ப பாடமாக இருந்தது. இந்நிலையில், தமிழ் மொழியை அந்த விருப்ப பாடத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும், இந்தி, ஆங்கிலத்துடன், 6ம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார்.
Advertisment
இந்த நிலையில், நேற்று டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு வகுப்புகள், பாடப் பிரிவுகள் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்தியிருக்கிறேன். அப்போது, கல்வித்துறை இதுகுறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று சபாநாயகர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
Advertisment
Advertisements
பின்னர், கடந்த மார்ச் மாதம் முன்னாள் கல்வி அமைச்சர் பொக்ரியால் நிஷாங்க் இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்திருப்பதாக எனக்குக் கடிதம் எழுதினார்.
ஆனால், இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக ஆன்லைனில் எல்லாப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடம்தான் இருக்கின்றது. தமிழ் மொழி இல்லை.
6-ம் வகுப்பு படிக்கும் மாணவர், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால்தான் 7-ம் வகுப்புக்குச் செல்ல முடியும் என்று சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால், தாய்நாட்டில் தாய்மொழியைப் படிக்க வாய்ப்பில்லை.
இந்த விவகாரம், உறுதி அளித்ததை மீறி நடந்திருப்பதால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தேன். அவர் உடனே கல்வித்துறைச் செயலாளரை வரவழைத்து அதுகுறித்துப் பேசினார்.
அதன்பின், என்னிடம், 'நீங்கள் தமிழகத்தை ஒரு உதாரணமாகக் காட்டுகிறீர்கள், உங்களுடைய கோரிக்கை எல்லா மாநிலங்களிலும் வரவேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. இது கொள்கை அளவிலான முடிவு. நிச்சயமாக நான் இதுகுறித்துப் பேசி, நல்ல முறையில் முடிவெடுக்கிறேன்.
பிரதமர் உட்பட என்னைப் போன்ற அமைச்சர்கள் யாரும் மாநில மொழிகளுக்கு எதிரிகளில்லை. அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்' எனக் கூறினார். அதை நடைமுறையில் காட்டுமாறு நான் வலியுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா,'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உடனடியாக தமிழ் ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' எனவும், 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்புக்கு செல்லும் ஒரு மாணவர் சமஸ்கிருதம் மட்டுமே படிக்க வேண்டும் என்பதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் பேசியுள்ள ஜவாஹிருல்லா, "2013-14 முதல்,கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஒரு விருப்ப பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழைக் கற்பிக்க முடியாது என்று அவர்கள் கூறியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செம்மொழி தமிழின் மகத்துவத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் சம்பளம் மாநில அரசால் தான் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.