திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாளை முதல் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு;
திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்பொழுது பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சுமார்ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர் இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்பொழுது பெல் நிர்வாகம் தங்களை கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதை கண்டித்து வேலை நிறுத்த கடிதத்தை டிசம்பர் மாதம் 13 ம்தேதி மாலை பெல் நிர்வாகத்திடம் சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர்.
இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை. இந்நிலையில் இன்று அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து இன்று கூட்டமைப்பின் தலைவர் திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் செய்தியாளர்களிடத்தில் தெரிவிக்கையில்; பெல் நிறுவனம் சொசைட்டி தொழிலாளர்களை ராணிப்பேட்டை நிறுவனத்தில் ஒரு வகையாகவும், திருச்சி நிறுவனத்தில் வேறு வகையிலும் நடத்தி வருகிறது கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இன்றி தொழிலாளர்கள் பெல் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மருத்துவ வசதி கூட அளிக்க மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, நாளை (19.01.2024) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்குகின்றோம். இதில் 600 பேர் வரை கலந்து கொள்வர். பெல் தொழிற்சாலையின் பாதுகாவல் பணி, மருத்துவர் பணி தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு கொள்வர். நாளை 19-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் பெல் நிறுவன முதன்மை நுழைவு வாயில் முன்பு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
இந்த கூட்டமைப்பிலுள்ள தொழிற்சங்கங்களான திராவிடர் கழகம், அண்ணா தொழிற்சங்கம், திமுக, மதிமுக, அம்பேத்கர் ,பி எம் எஸ் ஐ என் டி யூ சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களிலும் இருந்து தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் எனத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திராவிட தொழிற்சங்க நிர்வாகி காமராஜ், தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் நடராஜன், மோகன்ராஜ் சுகுமார், ஜான், சகாயராஜ், செல்வராஜ், அம்பேத்கர் சங்கத்தை சேர்ந்த சாமி, மாரியப்பன், முருகானந்தம், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெல் நிறுவனத்தில் சொசைட்டி தொழிலாளர்கள் துப்புரவு பணி, உணவகம், ஸ்டோர், சிவில், மருத்துவமனை டவுன்ஷிப் ஒயிட் வாஸ் உற்பத்திக் கூடங்கள் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பணி செய்து வருகின்றனர். இவர்களது வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு பெல் நிறுவனத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த வேலை நிறுத்த அறிவிப்பால் அத்தியாவசிய உற்பத்தி தேவைகளில் தட்டுப்பாடு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“