திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி என பல்வேறு வரியினங்களில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கட்டுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வரியினங்களை விரைந்து பெற்று மாநகராட்சி நலன் காக்க பல்வேறு அதிரடிகளை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவித்தும், செயல்படுத்தியும் வருகின்றார். அந்தவகையில், இன்று அவர் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு சூப்பர் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கின்றார்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்திருப்பதாவது; திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்.
எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த சூப்பர் ஆஃபர் மூலம் மாநகராட்சி மக்களும், மாநகராட்சியும் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“