திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் தெரு நாய்களின் கணக்கெடுப்பு பணி முடிந்து அவைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் பரோபரியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தகோரி பொதுமக்களிடமிருந்து அதிகமாக புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மற்றும் இது தொடர்பாக மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிக்கை செய்திகளிலும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து, தெரு நாய்களுக்கான ABC/ARV பணிகள் மாநகராட்சியின் கோணக்கரை ABC/ARV மையத்தில் பணிகள் நடைபெற்று வந்தது.
மேற்கண்ட பணியின் அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சியில் மூன்று இடங்களில் ABC/ARV மையங்கள் புதிதாக கட்டப்பட்டு, கீழ்க்கண்ட நான்கு ABC/ARV மையங்களில் M/s International Trust of Peace, சென்னை தொண்டு நிறுவனத்தின் மூலம் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோணக்கரை நாய்கள் கருத்தடை மையம்,
அம்பேத்கார் நகர் நாய்கள் கருத்தடை மையம்,
அரியமங்கலம் நாய்கள் கருத்தடை மையம்,
பொன்மலைப்பட்டி நாய்கள் கருத்தடை மையம் மூலம்
இம்மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் (23-24) 11929 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்ட்டது. நடப்பு நிதி ஆண்டில் (24-25) 8,892 தெருநாய்களுக்கும் ஆகமொத்தம் 20,821 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியின் அவசர அவசியம் கருதி தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இம்மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் பரோபரியாக சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் M/s. ANIMAL HELPING HANDS. திருச்சி நிறுவனித்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் 43,767 தெருநாய்கள் தற்போது இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளதாக கணக்கெடுப்பு பணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு ஏப்ரல் மாதம் முதல் வெப்சைட் துவங்கப்பட உள்ளது. தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி காண்காணிக்கும் பணிகள் இம்மாநராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்கண்டவாறு மாநகராட்சி ஆணையர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்