திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் முன்னணி கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், விசாரணையை தொடங்கிய போலீசார், பேராசிரியர்களான பால்ராஜ் மற்றும் ஜெபஸ்டின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஜெபஸ்டின் என்ற பேராசிரியரை போலீசார் கைதுசெய்துள்ளனர். பால்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“