திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
காவல்துறை அறிக்கையின்படி, அம்பாசமுத்திரம் உட்கோட்டம், பாப்பாக்குடி காவல் நிலைய சரகம், இந்திரா காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் சக்திகுமார் (22), தற்போது ரஸ்தாவூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அதே சமத்துவபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளஞ்சிறார்கள், சக்திகுமாரை ரஸ்தாவூர் கிராமத்திற்கு வெளியே உள்ள குளத்திற்கு வரவழைத்துள்ளனர். தாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியிலோ அல்லது காவல்துறைக்கோ எப்படி தெரிவிக்கலாம் என ஆத்திரம் கொண்டு, சக்திகுமாரை கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சக்திகுமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாக்குதலில் இருந்து தப்பிய சக்திகுமார், தான் வசிக்கும் பகுதியிலுள்ள வேறொரு நபரின் வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்ட நிலையில், அந்த இளஞ்சிறார்கள் அரிவாளுடன் அவரைத் தேடி அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர்.
காவல்துறையினர் மீது தாக்குதல் முயற்சி:
இந்த சம்பவம் தொடர்பாக ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது, அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளஞ்சிறார்கள் காவலர்களைத் தாக்க முயன்றுள்ளனர். இதில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளருக்கு தகவல் கிடைத்ததும், அவர் சம்பவ இடத்திற்கு வந்து இளஞ்சிறார்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், அந்த இளஞ்சிறார்கள் ஆக்ரோஷத்துடன் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனர். உதவி ஆய்வாளர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் உள்ள ஒரு பெண்மணியின் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளஞ்சிறார்கள், அந்த வீட்டின் கதவை அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பெண்மணி மற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கூடுதல் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த சக்திகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் தேடுதல் நடத்தியபோது, மார்பில் காயத்துடன் ஒரு இளஞ்சிறார் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு இளஞ்சிறார் கைது செய்யப்பட்டார்.
குற்றப் பின்னணி:
காவல்துறையின் அறிக்கையின்படி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது, வீட்டை சேதப்படுத்தியது, மற்றும் காவல் அலுவலரை கொலை செய்ய முயற்சித்தது போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்ட இந்த இரண்டு இளஞ்சிறார்கள் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முதல் இளஞ்சிறார் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசியது உட்பட நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது இளஞ்சிறார் மீது கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கு, பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு உட்பட எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத செயல்களால் அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் இருந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூடுதல் காவலர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.