திருநெல்வேலி சரவணா செல்வரத்தினம் கடையில் அரிவாளுடன் ரகளை செய்த ஆசாமியை போலீஸ் கைது செய்தது. பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறி அவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டிருக்கிறது. இவரது கைது, திருநெல்வேலியில் ரவுடிகளுக்கு ஒரு பாடம்!
Advertisment
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் குற்றவாளிகளைத் தேடி போலீஸ் அலைந்து கொண்டிருந்த போதுதான், இன்னொரு பரபரப்பு அரங்கேறியது. நெல்லை பைபாஸ் சாலையில் மேலப்பாளையம் அருகே அமைந்திருக்கும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு வந்த ஆசாமி, கையில் அரிவாளுடன் ஏக ரகளை செய்தார்.
கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அரிவாளால் துரத்துவது, கடைக் கண்ணாடிகளை அரிவாளால் அடித்து நொறுக்குவது என அவரது அட்டகாசம் அங்குள்ளவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இது இணையதளங்களில் வைரல் ஆனது. மேற்படி நபர் குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் மேற்படி நபரின் பெயர் முருகானந்தம் என்பதும், சில தினங்களுக்கு முன்பு இதே கடையில் நெய் திருடி மாட்டிக் கொண்டவர் என்பதும் தெரிய வந்தது. அந்தக் கோபத்தில் அரிவாளுடன் வந்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலியின் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் இவரது செயல்பாடு இருந்ததால், இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். அவரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே கைதான முருகானந்தம், சிறைக்கு செல்கையில் கை உடைந்து மாவுக் கட்டுடன் சென்றார். பாத் ரூமில் அவர் வழுக்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகளுக்கு இதுதான் கதி என போலீஸார் கூறி வருகின்றனர்.