/tamil-ie/media/media_files/uploads/2020/05/Capture.jpg)
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் உலகில் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி கோயில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில் தனக்கு இருக்கும் 23 அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஏப்ரல் 30ம் தேதி தேவஸ்தானம் வெளியிட்ட போதிலும்,நேற்று சமூக ஊடகங்களில் இந்த விஷயம் கடுமையாக விவாதிக்கப்பட்டது.
தமிழக மக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுத்த இந்த 23 அசையா சொத்துக்கள் ஏலம் விடும் முயற்சி, 2016ம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி இதுகுறித்து கூறுகையில்,"தேவஸ்தானத்திற்கு நன்மை பயக்குமெனில் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க அல்லது குத்தகைக்கு விட அதிகாரம் உள்ளது என்று ஏப்ரல் 9, 1990 ஆண்டு வருவாய் துறை (எண்டோவ்மென்ட்ஸ்) வெளியிட்ட அரசானை எண் 311-ல், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. 1974 முதல் 2014 வரை நிர்வகிக்க முடியாத 129 அசையா சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,"நாட்டின் பல்வேறு பகுதியில் நிர்வகிக்க முடியாத , 50 அசையா சொத்துக்களை ஏலம் விட கடந்த ஜனவரி 30, 2016 அன்று நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் அருங்காவலர் கூடத்தில், இந்த தீர்மானம் மீண்டும் முன்மொழியப்பட்டது. முறையான அறிவிப்பு ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கும், கொரோனா பொது முடக்கத்திற்கும், மாநில அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த முடிவு, இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆந்திர பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புகள், பின்வருமாறு:
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.