Tirupati Darshan News: தமிழகத்தில் இருந்து திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் திருப்பதியைப் போல மிகப்பெரிய ஏழுமலையான் கோயிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. இது ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி. ஆந்திர முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டு, தமிழக முதல்வரை இது தொடர்பாக சந்திக்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஒய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஒய்.சுப்பா ரெட்டி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கூறியிருக்கிறார். அது என்ன வென்றால், “திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்துதான் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அதனால், தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் திருப்பதியைப் போல மிகப்பெரிய ஏழுமலையான் கோயிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாகக் கூறினார். மேலும், ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆலோசனை நடத்திய பிறகு, சென்னையில் திருப்பதியைப் போல மிகப் பெரிய கோயிலைக் கட்டுவதற்கான பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கும் என்று அவர் கூறினார்.
இது போல, ஏற்கெனவே கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல, சென்னையில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும். இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தி நிலம் ஒதுக்குவது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக, ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் அதற்கான இடத்தை ஒதுக்கி தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், அதை அப்போது செயல்படுத்த முடியாமல் போனதாக தெரிவித்தார். ஆனால், இப்போது சென்னையில் அவ்வளவு பெரிய நிலம் கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், திருப்பதியில் விஐபி தரிசன சீட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி-க்களின் தரிசனை பிரிவை ஒன்றாக மாற்றியிருப்பதாக கிருஷ்ணா ராவ் கூறினார்.