திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், குமாரனந்தபுரம் காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவர், இந்து முன்னணி அமைப்பின் வடக்கு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். இது தவிர, இப்பகுதியில் ஃபைனான்ஸ் தொழிலையும் பாலமுருகன் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று இரவு 12 மணியளவில் பாலமுருகன், தனது வீட்டிற்கு திரும்பியதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை பாலமுருகன் வசித்து வரும் காமராஜர் வீதியில், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அதிகாலை 4 மணியளவில் மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், பாலமுருகனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து பாலமுருகன் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் தனது வீட்டின் அருகிலேயே அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.