/indian-express-tamil/media/media_files/dCn8QzDBshTLXJIHumiu.jpg)
Tiruvallur
திருவள்ளூர் காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கன்வேயர் பெல்ட்டில் துப்பட்டா சிக்கியதால், தலை துண்டாகி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் பால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று (ஆக. 20) வழக்கம்போல் இங்கு பால் உற்பத்தி செய்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. உற்பத்தியாகி வெளியே வரும் பாலை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரி (30) ஈடுபட்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் உமா மகேஸ்வரியின் துப்பட்டா சிக்கியது. உடனே சுதாரிப்பதற்குள் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.