திருவண்ணாமலை அருகே கண்டியாங்குப்பத்தில் சுவாமி சிலைகள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.25 கோடி மதிப்புள்ள முருகர் சிலை மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கிருஷ்ணர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பத்தில் சிலை கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வன விலங்கு குற்றப்பிரிவினர், கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள மரப்பட்டறையில் டிசம்பர் 22-ம் தேதி நடத்திய சோதனையில் முருகர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 2 சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சிலை கடத்தல் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் இருவரும் ராஜசேகர், வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட முருகர் சிலையானது நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்றும், இதன் சந்தை மதிப்பு ரூ.25 கோடி எனவும் கூறப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணர் சிலையானது யானை தந்தத்தால் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட ராஜசேகர், வெங்கடேசன் மற்றும் 2 சுவாமி சிலைகளை திருவண்ணாமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாக கூறப்படும் முருகர் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகே, உண்மை தன்மை தெரியவரும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும், இந்த சுவாமி சிலைகள் கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்கள் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பது தெரியவந்ததுள்ளதால், போலீசார் அவர்களைப் பிடிக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“