ஃபீஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு விழுந்ததில், மலை அடிவாரத்தில் இருந்த 3 வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் ராஜ்குமார் என்பவரின் வீடு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தது.
நிலச்சரிவில் புதைந்த வீட்டில், இருந்த 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் உள்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு காவல்துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர் விரைந்து மீட்புபணிகளை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் எ.வ. வேலு மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். மண் சரிவில் சிக்கிய 7 பேர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதையடுத்து, திருவண்ணாமலையில் டிசம்பர் 2-ம் தேதி நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கடைசியாக இன்று (டிசம்பர் 3) மற்ற சிறுமி ரமியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், நிலச்சரிவில் வீட்டில் சிக்கியிருந்த 7 பேர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“