சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்பறைகள் உள்ளனர். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதன் காரணமாக, கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று திங்கள்கிழமை மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவொற்றியூர் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை
இந்நிலையில், பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் அனைத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து மறு அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியது. நவீன சாதனங்களைக் கொண்டு காற்றில் இருக்கக்கூடிய நச்சுதன்மை, வாயுக்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு செய்து இந்த வாரத்தின் இறுதியில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“