உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.7) தொடங்கியது. இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து ஆதித்யா எல்.1 திட்ட இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஹர் ஷாஜிக்கு எழுந்து நின்று பாராட்டுவோம் என்று கோயல் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டிருப்பது துணிச்சலான முடிவு" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“