கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 7 - வது மலர் கண்காட்சியினை - 2025 மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தட்சிணாமூர்த்தி, துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது:-
10, 12 ஆண்டுகளாக மின்சாரம் வேண்டும் என்று விவசாயிகள் பதிவு செய்து காத்து இருந்த போதும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை, ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றவுடன், உடனடியாக இதற்கு அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டிற்கு உள்ளாகவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்புகளை வழங்கி புரட்சி செய்தவர்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்பதே ஒரு பெரிய வரப்பிரசாதம், மின்சாரம் இல்லை என்றால் விவசாயத்தில் உற்பத்தி செய்ய இயலாது.மின்சாரத்திற்காக போராட்டம் நடத்தியவர் தான் நாராயணசாமி நாயுடு, அந்த சமயம் அதிமுக ஆட்சி தான் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் எப்பொழுது கலைஞர் ஆட்சி ஏற்றாரோ அப்பொழுது இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். அப்பொழுதெல்லாம் தாலியை அடமானம் வைத்து மின்சார தொகையை கட்டிக் கொண்டு விவசாயம் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
இதில் புரட்சி செய்தது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். கடந்த வருடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காட்சியை கண்டு களித்தார்கள், அதே போன்று இன்று துவங்க இருக்கும் மலர்கண்காட்சியையும் பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும். மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், வேளாண் பல்கலைக் கழகமே கோவையில் துவங்கப்பட்டது.
கலைஞர் தான் வேளாண் பல்கலைக் கழகத்தையே துவங்கி வைத்தார், அதனால் தான் இன்றைய தினங்களில் விவசாயிகளுக்கு என்று தனி கல்லூரிகள் உள்ளது. கலைஞர் போட்ட விதையால் தான் இன்று 19 கல்லூரிகள் 28 உறுப்புக் கல்லூரிகள் என வளர்ந்து நிற்கிறது இந்த வேளாண் பல்கலை. அதே போல இங்கு ஆராய்ச்சி செய்து அறிவிக்கப்படும் வெரைட்டி பயிர்கள், மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்குமா என்று பார்த்து செய்ய வேண்டும். மக்களுக்கு லாபம் தரக் கூடிய வகையிலான பயிர்கள் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து தர வேண்டும்.
கோவையை சுற்றி உள்ள விவசாயிகள் எந்த மாதிரியான பயிர்களை பயிரிட்டால் லாபம் கிடைக்கும், என்பதை ஆராய்ந்து நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டென்ஷன் இருக்கும் அது சுகராக மாறிவிடும், இதையெல்லாம் தணிப்பதற்காகத் தான் மலர்கண்காட்சி. தி.மு.க அரசு பொறுப்பேற்ற அதற்குப் பிறகு தான் இது போன்ற மலர் கண்காட்சிகளை நடத்துகிறோம். இது போன்ற மலர் கண்காட்சியை கோவையில் நடத்துவதற்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன், அதே போல கடந்த நான்கு ஆண்டுகளில் 1106 கோடி ரூபாய் பல்வேறு நிவாரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளும் பயன்பெற்று இருக்கின்றார்கள். என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன், அதேபோல தொழில் நகரம் என்று நான் படிக்கும் காலத்திலேயே கோவை என்று தான் இருந்தது,அவ்வளவு பெருமை மிகுந்த நகரம் கோவை, அதே போல நடிகர் கார்த்தி அவர்கள் வைத்த கோரிக்கையின் படி, மாணவர்கள் இந்த ஆண்டு பண்ணை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால் விவசாயத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விலையும் பயிர் முளையிலேயே தெரியும் அதன் அடிப்படையில் பள்ளி, பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல வேளாண் பல்கலையில் செய்யக் கூடிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் மக்களுக்கு பயனளிக்க கூடியவையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன். அதேபோல நாம் ஆராய்ச்சி செய்து கொண்டு வரும் நெல்லை அனைத்து மாநில மக்களும் சாப்பிட வேண்டும், குறைந்த நாட்களில் விளையக் கூடிய நல்ல பலன் தரக்கூடிய பயிர்களை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.