தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் வாசித்த உரையில் தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறாதது அவை உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றச்சாட்டினார்.
”அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது. அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும். எனவே, அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்ற தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்.
முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் ஆளுநர் படித்த உரை வாக்கெடுப்பு மூலம் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
ஆளுநர் உரை வெற்று உரையாக இருந்தது,, ஆளுநர் உரையில், எந்தவித பெரிய திட்டங்களும் இடம்பெறவில்லை. மக்களுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இந்த அரசும், முதல்வரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகிலே தாங்களே தட்டிக் கொள்கின்றனர் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் இருந்தது.
ஆளுநரை அமர வைத்துக் கொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது என்று விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“