தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, துறைரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (28.04.2025) நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார், கடந்த 3 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகக் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என்றும் நீதிமன்றத்தில், வாய் திறந்து பேசுவதைத் தடுக்க போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டாரா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, திருவேங்கடம் துப்பாக்கியை எடுத்துச் சுட்டதால் தற்காப்பிற்காக என்கவுண்ட்டர் நடந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வீச்சரிவாள், அரிவாள்தான் பயன்படுத்தப்பட்டது; ஆம்ஸ்ட்ராங் உடலில் துப்பாக்கி குண்டு காய்ம் எதுவும் இல்லை; திருவேங்கடம் எப்படி துப்பாக்கியை மறைத்து வைத்திருக்க முடியும்? இது போலி என்கவுண்ட்டரா?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மேலும், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கத்தோடு பொற்கால ஆட்சியை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தியதாக பெருமிதம் தெரிவித்த அவர், தற்போது நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடும், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. துயரங்கள் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சாட்சி.
தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அ.தி.மு.க ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.
அ.தி.மு.க ஆட்சியில் குட்கா விவகாரம் தலைவிரித்து ஆடியதை யாரும் மறக்கவில்லை. இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தவர்கள் அ.தி.மு.க-வினர். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் 15,899 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் அரசாக தி.மு.க அரசு உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 55,925 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சியில் 91,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்ற 17,537 கடைகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் எந்த காரணத்தை கொண்டும், மதவாதம் உள்ளே நுழைய முடியாது! முடியாது! முடியாது! பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்தான் அதுபோன்ற நடவடிக்கைகள் மேலோங்கி இருக்கின்றன. ஆனால், அதுசார்பில் பிரதமர் அப்பகுதிகளை ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க போதிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இவற்றின் விலையில் ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் பதில் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம் சாண்ட், ஜல்லி விலையை யூனிட் ஒன்றுக்கு 1,900 ரூபாய் வரையில் உயர்த்திவிட்டு, 1,000 ரூபாயை மட்டும் குறைத்து இருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.