தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்கிறது. இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் முக்கிய பல அறிவிப்புகள் வந்தன.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்கள் கூறப்பட்டன. இன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே!
12:00 PM : டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க உத்தரவிடாததைக் கண்டித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இதில் கலந்து கொண்டன.
11:40 AM : முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசுகையில், ‘நீர் இருப்பு குறைவாக இருப்பதால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை’ என்றார்.
‘குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் இந்தாண்டும் அமல்படுத்தப்படும். சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் வழங்கப்படும். ரூ 22 கோடியில் 500 மோட்டார் பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். சூரிய சக்தி மூலம் மோட்டார் இயக்கும் விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும்’ ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
11:30 AM : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் அரசு சார்பில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நூலகங்களில் ஒரு மாதத்திற்குள் அகாடமி தொடங்கப்படும்’ என்றார்.
11:00 AM : மின் துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கு தேவையான காப்பர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாமிரத்தை வேறு இடத்தில் வாங்கி அமைக்க வேண்டியுள்ளதால் மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது’ என குறிப்பிட்டார்.