New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/TN-Assembly-MK-Stalin-1-1.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த நிகழ்வுகளைத் ட்டொதொகுத்து தருகிறோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த நிகழ்வுகளைத் ட்டொதொகுத்து தருகிறோம்.
Advertisment
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Advertisment
Advertisements
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பெஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.
நேற்றையதினம் அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதலமைச்சர் மாண்புமிகு உமர் அப்துல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத – தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.
பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அவர்களே, காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
“மாநகர் போக்குவரத்து கழகம் கீழ் செயல்படும் அயனாவரம், முகப்பேர்(கிழக்கு), எம்எம்டிஏ காலனி, திருவேற்காடு, பெசன்ட் நகர் மற்றும் கண்ணகி நகர் ஆகிய ஆறு பேருந்து முனையங்களில், பயணிகளுக்கு தேவையான இருக்கைகள், நேரக்காப்பாளர் அறை, கழிப்பறை வசதி, பயணிகள் காத்திருப்பு பகுதி, சுத்தமான குடிநீர் மற்றும் தரைத்தள வசதிகள் உள்ளிட்டவை ரூ.7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
அதிநவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள் மூலம் தொழில்நுட்ப உற்பத்தித்திறனை பணிமனைகளில் அதிகரிக்க ஒரு பணிமனைக்கு ரூ.1.05 கோடி வீதம், எட்டு பணிமனைகளுக்கு ரூ.8.4 கோடி செலவில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு தொழில்நுட்ப உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகள் ஒரு பணிமனைக்கு ரூ.1.5 கோடி வீதம், 50 பணிமனைகள் ரூ.75 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில், நைட்ரஜன் காற்று நிரப்பும் இயந்திரங்களை அமைத்து உருளிப்பட்டை(tyre) பராமரிப்பை மேம்படுத்த ஒரு பணிமனைக்கு ரூ.2.5லட்சம் வீதம், 100 பணிமனைகளில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.
போக்குவரத்து கழக பேருந்துகளில் நான்கு வெளிப்புற கேமராக்களை பொருத்த ஒரு பேருந்துக்கு ரூ.37,500 வீதம் 4000 பேருந்துகளுக்கு ரூ.15 கோடி செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.
பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டும் முறையை மேம்படுத்தும் விதமாகவும், விபத்துகளை குறைக்கும் விதமாகவும், பேருந்துகளில் முன்னோடி முயற்சியாக ஏஐ மற்றும் ஐஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு, ஒரு பேருந்துக்கு ரூ.40,000 வீதம் 500 பேருந்துகளுக்கு ரூ.2 கோடி செலவில் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும்.
மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் 20 அரசு தானியங்கி பணிமனைகள் மற்றும் இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு எல்இடி திரை வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் எல்காட் நிறுவனம் மூலம் ரூ.1.10 கோடி செலவில் பொருத்தப்படும்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தருமபுரியில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகியவைக்கு ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
திருச்சி மற்றும் சேலத்தில் இயங்கி வரும் ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி மையத்தில் கலந்துக்கொள்ளும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கு மூன்று நாட்கள் தங்கி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.1.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
புதிய நவீனரக வாகனங்களின் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகளை மோட்டார் வாகனப் பராமரிப்பு துறையில் கோவை, நெல்லை, தஞ்சை, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு ரூ.30 லட்சம் செலவில் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டடம் ரூ.7.27 கோடி செலவில் கட்டப்படும்.
போக்குவரத்து துறையின் மின்னணு அலுவலக பயன்பாட்டிற்காகவும், நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்காகவும், வருங்கால மின்னணு ஆளுமை நோக்கத்திற்காகவும் அனைத்து பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் 596 கணினிகள், 269 அச்சுப் பொறிகள் மற்றும் 269 ஸ்கேனர்கள் ரூ.4.88 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் 2025-2026ம் ஆண்டிற்கு சாலைப் பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியிலிருந்து ரூ.130 கோடியாக உயர்த்தப்படும்.” என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆர்.கே.நகர் தி.மு.க எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் என்கிற ஜான் எபினேசர் பேசுகையில், “என்னுடைய ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் துர்காதேவி நகர் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மாறிவரும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக, மின் பற்றாக்குறை என்பது வெகுவாக நிலவுகிற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதிகளில் துணை மின் நிலையங்களை அமைக்க அமைச்சரிடம் கடிதம் வழங்க இருக்கிறேன். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வண்ணம், அப்பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுமா?” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், “தமிழ்நாடு மின்சாரத் துறையினுடைய வரலாற்றில், இந்த நான்காண்டுகளில், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிக பணிகளைச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுகுறித்து உறுப்பினருக்கும் நன்றாக தெரியும். நானே அந்த பகுதிகளுக்கு நேரில் சென்றபோது, சட்டமன்ற உறுப்பினரையும் உடன் அழைத்துச் சென்றேன். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உறுப்பினர் சுட்டிக்காட்டியிருக்கிற துணை மின் நிலையம் அரசினுடைய பரிசீலனையில் உள்ளது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.