தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ஒரு ராஜதந்திரம். இந்த தீவுக்கு என்று நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இந்திரா காந்தி காலத்தில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது.
கச்சத்தீவை கொடுத்தது சிறிய தீவு. அது சென்னை போன்ற அளவிலானது. அதனை கொடுத்து விட்டு 6, 7 மாநிலங்கள் அளவிலான கடல்பரப்பை எடுத்தார்கள். அவை மிகப்பெரிய கனிம வளம் கொண்டவை. இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது சாதாரண முடிவு அல்ல. மிகப்பெரிய ராஜதந்திர முடிவு." என்று கூறியிருந்தார்.
அண்ணாமலை கேள்வி
இந்த நிலையில், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என செல்வப்பெருந்தகை கூறியதற்கு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்ப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.
எங்களுக்கு சில கேள்விகள், கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா?
மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா? கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா? என்று அவர் கேள்வி எழுப்ப்பி இருக்கிறார்.