scorecardresearch

எல்லாம் தெரியும் என்றால் எதற்காக டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள்? இ.பி.எஸ் தரப்புக்கு பா.ஜ.க பதிலடி

ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரையும் சந்தித்த சி.டி.ரவி தமிழகத்தின் நலன் கருதி அதிமுக இரு அணிகளும் ஒன்றினைய வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது.

Nirmal Kumar
நிர்மல் குமார்

உங்களுக்கே எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017-ல் டெல்லி வழிகாட்டுதல் படி கூட்டணியில் இணைந்தீர்கள் என்று இபிஎஸ் தரப்புக்கு பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளுக்கு நாள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே பாஜகவின் மெலிய பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று அதிமுகவின் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழகத்தின் நலன் கருதி அதிமுக இரு அணிகளும் ஒன்றினைய வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி கூறுகையில், 1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். அந்த வார்த்தை தற்போதுவரை பொருந்துகிறது.

திமுக இப்போதுவரை தீயசக்தியாகத்தான் இருக்கிறது. எனவே திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரையும் சந்தித்தோம் என்று கூறியிருந்தார்.

சி.டி.ரவியின் இந்த கருத்து வைரலாக பரவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  அதிமுகவில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா?

பாஜக கர்நாடகாவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் பரவாயில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும் 30 வருடங்கள் அதிமுக ஆட்சி செய்த தமிழகத்தில் திமுகவை மட்டும் எதிர்த்து எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறலாம் என்று நீங்கள் நினைப்பது எது? தீயசக்தி என்றால் என்ன, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சியை ஆரம்பித்ததற்கான காரணத்தை சொல்கிறீர்களா? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து பேசுங்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிமுக பிரமுகரின் இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில்,  எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? திரு  சிடி.ரவி அவர்கள் கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn bjp it wing head twitter reply to aiadmk executive

Best of Express