தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வட சென்னைக்கு சிறப்புக் கவனம் அளித்து, வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டங்களை அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாபெரும் 7 தமிழ்க் கனவு என்று 2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலையை அறிக்கையை செவ்வாய்க்கிழமை (19.02.2024) காலை முதல் தாக்கல் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு, ரூ.1,000 கொடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்ததாவது: “சென்னை பெருநகர மாநகராட்சியில் நவீன உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் 42 விரிவாக்க பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1183 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இத்திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவான நகரமயமாக்கலின் விளைவாக சென்னை மாநகரத்தில் வாகன போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காக கண்டறியப்பட்டுள்ளன.
அதன் முதற்கட்டமாக புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை மற்றும் செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டர் ஆகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமை பரிமாற்ற டி.டி.ஆர் முறையில் அகலப்படுத்தும் திட்டம் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்கரச் சென்னையை உருவாக்கும் நோக்கோடு சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொதுச் சதுக்கம் கண்காட்சி அரங்குகள் திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூக கட்டமைப்பு வசதிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னை கடற்கரை ஓர பகுதிகளை அழகுடன் சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம் எண்ணூர் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரை பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதியுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.
நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வட சென்னையில் போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வட சென்னை வளர்ச்சி திட்டம் எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாட்டர் பேஸின் சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள், எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் 53 கோடி ரூபாய் புதிய உயர்தர சிறப்பு சிகிச்சை பிரிவுகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், ராயபுரத்தில் அரசு மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டிடங்கள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று புதிய தலங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தொழிற் பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல், 45 கோடி மதிப்பீட்டில் 10 பள்ளிகளை புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினி மயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
சென்னை மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் அவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்ய சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், கழிவு நீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல் திறன் போதுமானதாக இல்லை. எனவே, வட சென்னை பகுதிகளில் கழிவு நீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவு நீரை திறம்பட அகற்றுவதற்கும் நீர்நிலை மாசுபாட்டை தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்” என்று நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“