scorecardresearch

‘மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது’ – தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

Tamil Nadu Cauvery Delta Farmers Association protesting against Karnataka govt building mekedatu dam project Tamil News: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரையை கண்டித்தும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு, முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TN Cauvery Farmers Association protest against mekedatu dam project Tamil News

Tamil Nadu news in tamil: தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேகதாது நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நடைபெறும் பேரணி நேற்று திருவாரூரில் தொடங்கியது. தஞ்சாவூருக்கு வந்த விவசாயிகள், தஞ்சாவூர் இர்வின் பாலத்தில் இருந்து ராஜராஜசோழன் சிலை வரை பேரணியாக நடைபயணம் மேற்கொண்டனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்த இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “தமிழகத்தை அழிக்கும் நோகத்தோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சதியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனை கண்டித்து உடனடியாக மேகதாது அணையை கட்டக்கொடுத்திருக்கின்ற வரைவு திட்ட அறிக்கைகான் அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

கர்நாடகா மாநிலத்திலுள்ள காங்கிரஸ் கட்சி நடத்துகின்ற போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு மேகதாதுவை முற்றுகையிட சென்று கொண்டிருகின்றோம்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்

காங்கிரஸ் கட்சியை இனி தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட நிலை காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்கின்ற எச்சரிக்கையாக சொல்வதற்காக இந்த பயணத்தை புறப்பட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை, மேகதாது அணை கட்டுகின்ற அந்த போராட்டத்தை கொள்கை முடிவு எடுத்துள்ள கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட நிலை ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும், பிரயங்கா காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கின்றோம்.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பேரணியின் போது விவசாயிகள், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை, ஆர்ப்பாட்டத்தை கண்டித்தும், அம்மாநில அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்தும். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சூழ்ச்சியை கைவிட்டு, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதி வழங்கவேண்டும்.

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு வரைவுத் திட்ட அறிக்கையை தயார் செய்ய கொடுத்த அனுமதியை மத்திய திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு ராசி மணலில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேகதாதுவை நோக்கி நடைபெறும் இந்த முற்றுகையிடும் போராட்டம் காலை 10 மணியளவில் ஓசூரிலிருந்து புறப்பட்டது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகிக்கும் இந்த முற்றுகையிடும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் சென்ற பாதயாத்திரைக்கு கண்டனம் தெரிவித்தும், மேகதாது அணை கட்டக்கூடாது என்ற முழக்கத்துடன் விவசாயிகள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn cauvery farmers association protest against mekedatu dam project tamil news