முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வை-பை இண்டெர்நெட் வசதி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன் முதற்கட்டமான பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்று 50 இடங்களில் இந்தச் சேவை துவங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக, ரூபாய் 50 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் 16.08.2017ல் வெளியிடப்பட்டது. பிறகு தற்விக்க முடியாத சம்பவங்களால் அந்தத் திட்டம் கிடப்பில் இருந்தது. தற்போது இந்த அம்மா வை-பை திட்டத்தைச் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் முதல்வர் துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் வெளியிட்ட செய்தி அறிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அம்மா வை-பை சேவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தச் சேவையை அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
இந்த வை-பை வசதியை பொதுமக்கள் 20 நிமிடங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம், பின்னர் பயன்படுத்தப்படும் ஒரு மணி நேரச் சேவைக்கு ரூ.10 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.