It-raid | s-jagathratchagan | cm-mk-stalin | dmk: சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை!
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், தி.மு.க எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்க துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பா.ஜ.க மறந்துவிட்டது. ஆனால் அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதில் நரகத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க தெளிவாக பயப்படுகிறது. அவர்கள் தங்கள் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது." என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“