பெங்களூரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்தலாலா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச) மாநில துணைத் தலைவராக இருந்த கவிஞர் நந்தலாலா, முன்னணி பட்டிமன்றப் பேச்சாளார் ஆவார். இவர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர், திருச்சி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கவிஞர் நந்தலாலா எழுதிய சில கட்டுரைகள்: திருச்சி - ஊறும் வரலாறு மிக முக்கியமான கட்டுரையில் ஒன்று. இலக்கியம், ஆன்மிகம் போன்ற திருச்சியை பற்றிய பலவகை செய்திகள் இவற்றுள் அடங்கும். கவிஞர் நந்தலாலா எழுதிய 'திருச்சி - ஊறும் வரலாறு' என்ற தொடர், விகடன் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பின்னர் புத்தகமாக வெளியானது. இந்தப் புத்தகத்தில், இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றிய தகவல்கள், திருச்சியில் வேளாண்மை, சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி'யும் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியன் வங்கி காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஓசூர் அருகில் உள்ள நாராயணா இருதய சிகிச்சை மருத்துவமனையில் பை பாஸ் ஆபரேஷன் செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். கவிஞர் நந்தலாலா உடல் இன்று இரவு திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, நாளை இறுதிச்சடங்குகள் அங்கு நடைபெறவுள்ளது.
ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தலாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். கவிஞர் நந்த லாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்" அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்