/indian-express-tamil/media/media_files/2025/10/03/tn-cm-mk-stalin-speech-ramanathapuram-meeting-attack-aiadmk-doll-to-bjp-tamil-news-2025-10-03-11-22-40.jpg)
"தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. ஜி.எஸ்.டி, நிதி பகிர்வு உள்ளிட்டவற்றில் தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுகிறது." என்று ராமநாதபுரத்தில் ஸ்டாலின் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள புல்லாங்குடி பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.738 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
பல்வேறு பெருமைகளுக்கு பெயர்போனது ராமநாதபுரம் மண். மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மண் இது. விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் டிசம்பரில் தொடங்கப்படும். இதன் மூலம் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறுவர். இனிமேல் ராமநாதபுரம் ‘தண்ணியில்லா காடு’ என்று சொல்ல முடியாது. மாவட்டத்தில் 2.36 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர்.
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ரூ.30 கோடி செலவில் 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிசாலையாக மாற்றப்படும். திருவாடனை, ஆஸ்மங்கலம் வட்டங்களில் உள்ள 16 கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும். பழைய பேருந்து நிலையம் நவீன வளாகமாக மாற்றப்படும். பரமக்குடி நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். சொன்னதை மட்டும் செய்வதல்ல, சொல்லாதவற்றையும் செய்யும் அரசு இது – நமது திராவிட மாடல் அரசு.
இலங்கை கடற்படையின் மீனவர்களைச் சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு மீனவர்கள் இந்தியர்கள் அல்லவா? இலங்கை மந்திரி ‘கச்சத்தீவை தரமாட்டோம்’ எனக் கூறியபோது, இந்திய வெளியுறவு மந்திரி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டியதல்லவா? ஆனால் பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை புறக்கணித்துவிட்டது. இதுவரை நமது மீனவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. ஜி.எஸ்.டி, நிதி பகிர்வு உள்ளிட்டவற்றில் தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மணிப்பூருக்கு குழு அனுப்பாத மத்திய அரசு, தமிழகத்தில் கரூருக்கு மட்டும் குழுவை அனுப்புகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் என்பதால் தான் இந்த நடவடிக்கை. தமிழக நலனில் அக்கறை உள்ள யாரும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள். பா.ஜ.க-விடம் தலையாட்டிப் பொம்மையாக அ.தி.மு.க இருக்கிறது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.