Advertisment

'வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது': ஸ்டாலின் பேச்சு

'வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

author-image
WebDesk
New Update
vp singh mk stalin

'மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

cm-mk-stalin | tamil-nadu: முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். 

Advertisment

இதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில், வி.பி.சிங்கின் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியது பின்வருமாறு:- 

வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள். மத்திய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேரும், ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் 88 பேரும் உயர்ஜாதியினர். மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இடஒதுக்கீடே இல்லை. 

நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அரசு துறைகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும்.

வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது.

மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம்; ஆனால் பிரச்சனைகள் ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல், அடிமைத்தனம், தீண்டாமையை முறிக்கும் மருந்துதான் சமூகநீதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment