Advertisment

ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் ஏன்? ஸ்டாலினை சந்தித்த திருமா விளக்கம்

வி.சி.க தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்னர், நிகழும் முதல் சந்திப்பு இதுவாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin and thiruma (1)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலினை இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

Advertisment

முன்னதாக, அக்கட்சியில் இருந்து துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்காலிகமாக நீக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின் போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையானது.

குறிப்பாக, தமிழகத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் பேசிய கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு.கவினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்றைய தினமே முதலமைச்சர் ஸ்டாலினை, திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் நேரில் சென்று சந்தித்தார்.

Advertisment
Advertisement

இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திரட்டப்பட்ட ரூ. 10 லட்சத்திற்கான வெள்ள நிவாரண நிதியை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார். ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு மாத ஊதியமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்ட பின்னர், திருமாவளவன் மற்றும் ஸ்டாலின் இடையே நிகழ்ந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது ஆதவ் அர்ஜுனா நீக்கம் குறித்து அவர் விளக்கமளித்தார். "ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக கட்சியின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அவரிடம் இது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும், அறிவுறுத்தல்களை மீறி ஆதவ் அர்ஜுனா செயல்பட்டார். அதனால் தான் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து, அவரை 6 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்திருக்கிறோம். 

விஜய்யுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த விதமான மோதலும் இல்லை. எங்கள் நலனை கருத்திற்கொண்டு தான் விஜய் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்தோம். 

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் அறிவுறுத்தினேன். அம்பேத்கர் அல்லது நூல் உருவாக்கத்தின் பின்னணி குறித்து பேசுங்கள் எனக் கூறினேன். அதை மீறி அவர் பேசியது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவிற்கு அது அமைந்து விட்டது. 

அதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் உள்ளதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. முதலில், பா.ஜ.க மோடி கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லை அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என அவர் பதிலளிக்க வேண்டும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stalin Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment