தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி ஆகியயோர் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், "சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக பிரசார பயணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/image-2020-12-02T201254.528.jpg)
"தமிழக வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில், திமுக-வும் அதிமுக-வும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணித் தொடரும் என்று முதல்வரும், துணை முதல்வரும் உறுதி படுத்தினர். தமிழக எதிர்க்கட்சியான திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் இத்தேர்தலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. வேளாண் மசோதா தொடர்பான போராட்டத்தை டெல்டா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து நடத்தி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/image-2020-12-02T201350.865.jpg)
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே வென்றது. திமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் வெல்லக்கூடிய இடங்களை அடையாளம் காண்பது குறித்து தமிழகத் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
சில தினங்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், சட்ட மன்ற தேர்தலுக்காக திமுக-விடம் பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்தத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நேற்றைய கூட்டத்தின் போது, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரவுகளைப் பயன்படுத்தி இடங்களை அடையாளம் காண்பதுடன், வாக்குச்சாவடி அளவிலான குழுக்களை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தினார். மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட பல தலைவர்கள் ராகுல்காந்தியை தமிழகத்தில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.