காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நாகை அவுரி திடலில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஓ. எஸ்.மணியன், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடகமாடி வருகிறது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை மத்தியில் ஆண்ட பெரும்பாலான பிரதமர்கள் தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்திருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டினார்.
பின்பு கூட்டத்தில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் திமுக பல்வேறு துரோகங்களை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு அதிமுக வழங்கி வருவதாகக் கூறினார். அத்துடன், விரைவில் தமிழகத்தில் காவிரி வாரியம் அமைத்து காவிரி நீரைத் தமிழகத்திற்கு பெற்றுத்தராமல் ஓயமாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.