தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 24 மணிநேரத்திற்குள் இ-பாஸ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவம், திருமணம், இறப்பு போன்றவற்றுக்கு தவிர வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக இருந்தது. அதேவேளை பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் வழங்கும் வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் இ-பாஸ் நடைமுறையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எப்படி விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைக்காது என்பதே மக்களின் எண்ணமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் பழனிசாமி, 17ம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் 24 மணிநேரத்திற்குள் இ-பாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மிக முக்கிய காரணங்களுக்காக மட்டும் மக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இ - பாஸ் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை. இதோ
https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதுதான் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கும்பொருட்டு, தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ஆகும்
அதனுள் கேட்கப்படும் விபரங்களை நிரப்பி, உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி எண்ணை அதில் பதிவிடவும்
பின் பயணம் சொந்த வாகனத்திலா அல்லது தனியார் வாகனமா என்பதை தெரிவு செய்து, சாலை மார்க்கமாக அல்லது ஆகாய மார்க்கமாக என்பதையும் குறிப்பிட்டு, தனிநபர் அல்லது குழுப்பயணம் என்பதை தெரிவு செய்யவும்.
பின்னர் கிடைக்கும் படிவத்தில், பெயர், முகவரி, மாவட்டங்களுக்கு இடையேயான பயணமா அல்லது மாநிலங்களுக்கு இடையேயான பயணமா என்பதை தெரிவு செய்யவும். பயண கால அளவு, பயணிகளின் எண்ணிக்கை, வாகன விபரங்கள், அடையாள ஆவணங்கள், பயணத்திற்கான காரணம், மருத்துவம் சார்ந்த பயணம் என்றால், மருத்துவர்களின் அறிக்கைகள் அல்லது திருமணத்திற்காக செல்வதானால், திருமண அழைப்பிதழின் பிரதியை இணைக்க வேண்டும்.
வெரிபிகேசன் நிறைவடைந்தவுடன், அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகள் பதிவேற்றப்படும். அது பரிசிலீக்கப்படும்.
ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வீட்டு முகவரிக்கான சான்று, வண்டி உரிமம், பணியிட அடையாள அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இ-பாஸ், தற்போது அரசு டெண்டர்களில் பங்கேற்க, வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் தவிப்போர் ஊர் திரும்ப, அரசுப்பணிகளில் பங்கேற்க உள்ளிட்ட காரணங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயம், சரக்கு போக்குவரத்து, சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு இ-பாஸ் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 1.20 லட்சம் இ-பாஸ் :தமிழகத்தில் நேற்று 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவுடன் இ-பாஸ் கிடைக்கும் புதிய நடைமுறையால் ஒரேநாளில் பலரும் விண்ணப்பம் பதிவு செய்கின்றனர்
பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் ஆனது போன்று, விண்ணப்பித்த அனைவரும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருவதால், இ -பாஸ், ஈஸி பாஸ் ஆக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.