திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டதாக போஸ்டர் ஒன்றை தமிழக பா.ஜ.க பரப்பியது. அப்போஸ்டர் போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க-வினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மலையின் மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடப்படுவதால், அங்குள்ள கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படுகிறது பா.ஜ.க கூறி வருகிறது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டதாக ஒரு போஸ்டர் பகிரப்பட்டது. அப்போஸ்டரில், "மதுரை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில், மத வழிபாட்டு உரிமையை காக்க, சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் மதுரை வாழ் அனைத்து மத சகோதரர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இது போன்ற போஸ்டர் எதுவும் வெளியிடவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க வதந்தி பரப்புவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த உண்மைத் தன்மையை தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இக்குழுவினர், சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஜமாத்தின் மறுப்பு அறிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர்.