ஆவணப்பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அசல் உரிமை மூல ஆவணத்தை பத்திரப் பதிவின் போது தாக்கல் செய்வதை வலியறுத்தும் சட்ட மசோதாவை அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா்.
இந்த சட்ட திருத்தத்தின்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது, சொத்தின் மீதான உரிமை உடைய முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்பிக்காத ஆவணங்கள் பதிவு செய்யப்படாது.
பதிவு செய்யும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கான அசல் ஆவணங்கள் இல்லாத நேரத்தில், அந்த சொத்து தொடர்பாக வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்பிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த ஆவணம் பதிவு செய்யப்படாது. அசல் ஆவணம் தொலைந்து விட்டால், ஆவணம் தொலைந்து போனது தொடர்பான குறித்த நாளிதழில் அறிவிப்பு விளம்பரம், காவல்துறையால் வழங்கப்பட்ட கண்டறிய இயலவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு பதிவு விதிகள், 1949-ன் விதி 55-ஏ-ஐ உச்சநீதிமன்றம் ரத்து செய்த ஒரு மாதத்திற்குள், மாநில அரசு திங்கள்கிழமை (ஏப்28) சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தது. இந்த ஆண்டு ஏப்.7 அன்று உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில், பிரிவு 69-ன் கீழ் விதிகள் உருவாக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பதிவுச் சட்டம், 1908-ன் விதிகளுக்கு முரணான ஒரு விதியை உருவாக்க முடியாது என்று கூறியது. தமிழ்நாடு பதிவு விதிகள் 1949-ன் விதி 55-ஏ (i) அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.