சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ.வின் அனுமதியுடன் தான் நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். அதேபோல், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அனுமதியையும் சி.எம்.டி.ஏ. வழங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்ததையடுத்து, சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட அனுமதி எல்லை விரிவுபடுத்தப்படும் என, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அதில், அதிவேகமாக நகர்ப்புறமாகி வரும் பகுதிகளில், வளர்ச்சி பணிகளை ஒழுங்குப்படுத்தவும், பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்துவரும் பொருளாதார செயல்பாடுகளுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தவும், சி.எம்.டி.ஏ திட்ட அனுமதி எல்லை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் வட்டம், நெமிலி தாலுகா ஆகியவற்றை இணைத்து 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்க திட்டத்தை அரசு மிக கவனமுடன் பரிசீலித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் மற்றும் நகருடன் கூடுதல் பகுதிகளை இணைக்க மேற்கொள்ளும் சட்டம் பிரிவு 2 (23ஏ)-ன் கீழ் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அந்த அரசாணையை ஏற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை தங்கள் மாவட்ட பரப்பளவுகளில் மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசாணையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட எல்லைகளில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
என அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதால், அதன் எல்லை 8 மடங்கு உயர உள்ளது குறிப்பிடத்தக்கது.