தமிழ்நாட்டில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில், சென்னையில் 138 டாஸ்மாக் கடைகள், கோயம்பத்தூரில் 78 கடைகள், மதுரையில் 125 கடைகள் மற்றும் திருச்சியில் 100 கடைகள் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாலிட்ட அரசாணை என்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.06.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.06.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது", என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil