New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/cx1mcs1z.jpg)
வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வீட்டிலேயே பிரசவம் பார்க்கின்றோம் என்று செய்யப்படும் முட்டாள் தனத்திற்கு தமிழகத்தில் ஒரு போதும் அனுமதியில்லை. சுகாதரத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை.
பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறுஜென்மம் என்பதை நாம் பலர் சொல்லக் கேட்டிருப்போம். உடல் ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இதை அறிந்த ஆண்களும் பெண்களும் இங்கு உண்டு.
மிகவும் இக்கட்டான சூழலில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இறந்த தாய் மற்றும் சேய்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.
இந்த இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும், பல்வேறு காலங்களிலும் கால நிலைகளிலும் பெண்கள் எந்த ஒரு இடர்பாடுமின்றி பேறு காலத்தில் மருத்துவ வசதிகளை பெற அரசு செய்த நடவடிக்கைகள் அளப்பரியது.
ஆனால் சமீபமாக இயற்கை மருத்துவத்தை மீட்டெடுக்கின்றேன் என்றும் , ஆயுர்வேதம், சித்தா, தமிழ் மரபு வழி மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றேன் என்றும் புதிதாக சிலர் வீட்டிலேயே பிரசவம் பார்க்க கிளம்பியுள்ளனர்.
சமீபத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறைகளை கற்றுத் தருவதாக கூறி பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
அது தொடர்பான செய்திகளைப் படிக்க
இணைய தளங்கள் மற்றும் யூடியூப் வழிக்காட்டுதல் என்ற பெயரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து அதில் உயிர் பலி ஆன சம்பவங்களும் அரங்கேறுகின்றன. ஏற்கனவே சென்ற மாதம் திருப்பூரில் ஒரு தம்பதியினர் யூடியூப் வீடியோ உதவியுடன் பிரசவம் பார்க்க முற்பட்டு அப்பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் தம்பதிகள் பற்றிய செய்தியினைப் படிக்க
இந்த உயிரிழப்பும் கூட யாரையும் எச்சரிக்கவில்லை என்பதை தேனியில் நடந்த மற்றொரு பிரசவ நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. கண்ணன் மற்றும் மகாலட்சுமி தம்பதியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தேனி கோடாங்கிபட்டியில் வசித்து வருகின்றனர்.
பட்டதாரிகளான இருவரும் ஆங்கில மருத்துவமுறைகளுக்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி வீட்டிலேயே சுகப் பிரசவம் பார்க்கவும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
நிறைமாத கர்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு வியாழனன்று (02/08/2018) இடுப்பு வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். அத்தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் தொப்புக் கொடி மற்றும் நச்சினை அகற்றுவதற்கு விருப்பமில்லை என்று கூறி அதை அப்படியே வைத்திருந்தனர். ஒரு வாரத்தில் அதுவாகவே தானாக உதிர்ந்து விடும் என்று யாரோ சொல்லக் கேட்டு அப்படியே விட்டுவைத்திருந்தனர்.
ஆனால் சில சித்த மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு பின்னர் தொப்புள் கொடியை அகற்றி உள்ளார் கண்ணன். தாய் - சேய் நலனை கருத்தில் கொண்டு அவரது வீட்டுக்கருகில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதனை அறிந்த தமிழக சுகாதரத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. "
போதிய மருத்துவ வசதியின்றியோ, மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றியோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் திரைப்படங்கள் பார்த்து அதன் உத்வேகத்தினாலோ, யூட்யூப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சிப்பதும், தாய் மற்றும் சேய்க்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளை தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் .
தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டத்தின் படி ஒரு பகுதியில் இருக்கும் தாய் மற்றும் சேயினை பாதுகாப்பது அப்பகுதி அரசு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் முக்கியப் பணியாகும்.
அவர்களின் பணியை முறையாக செய்யவிடாமல் தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இது போன்று இனி நடைபெறும் பட்சத்தில் சட்டப்படி அக்குடும்பத்தினர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல்வாகு, இரத்தப் போக்கு போன்ற காரணங்களால் சுகப்பிரசவம் எந்நேரத்திலும் அபாயமான நிலையை எட்டலாம். போதிய மருத்துவ வசதியும் முன் அனுபவமும் இல்லாமல் போனால் இரு உயிருக்கும் ஆபத்து தான்.
மருத்துவ வசதிகள் இருக்கும் பட்சத்தில் இந்த அபாயத்தில் இருந்து தாய் மற்றும் சேயினை காப்பாற்ற இயலும். முட்டாள் தனமான நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் அரசு ஆதரவு தராது என்றும் திட்டவட்டமாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.