"காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கவில்லை. காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். இன்றும் காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என்று கூறியுள்ளார்.