அரசு பணிகளில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30% இடஒதுக்கீடு இனி 40%ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை திங்கள்கிழமை (செப்டம்பரம் 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாள் அமர்வான இன்று தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும். அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப்பாடம் தகுதித் தேர்வில் கட்டாயமாக்கப்படும்.
கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் இந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 30% இடஒதுக்கிடு 40%ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் மேலும், இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”