New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/27/dogs-mercy-killing-2025-07-27-11-56-11.jpg)
நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகப்படியான காயங்களுடன் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், அவற்றை கருணைக் கொலை செய்ய கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகப்படியான நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க்கடி மட்டுமல்லாமல் சாலை விபத்துகளும் தெரு நாய் தொல்லையால் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு நாய்க்கடியின் காரணமாக மனிதர்களிடையே ஏற்படும் ரேபிஸ் நோய் தொற்றும் அதிகமாகி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதற்கான பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.