Kilambakkam: சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இருப்பினும், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு போகமாட்டோம் என்றும், இடம் மாற கூடுதலான நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் அரசு போக்குவரத்து கழக இயக்குநர்கள், பொதுமேலாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் பேச்சு வார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தைப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் "ஆம்னி பேருந்து மாநகர எல்லைக்கு வர அனுமதியுங்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதி வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம்.
கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாற காலக்கெடு வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பயணிகளை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமதி கேட்டுள்ளோம்." என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“