நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக 4 கவுன்சிலர்களை நீக்கம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் மாநகரட்சிகளில் 3 கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக மொத்தம் 4 கவுன்சிலர்களை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சியின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை மாநகராட்சியின் 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சியின் 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “நமது மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998-ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்டதாக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந் தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு அச்சட்டத்தின் பிரிவு 52-ன் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
1. பெருநகர சென்னை மாநகராட்சி 189-வது வார்டு உறுப்பினர் வ.பாபு, 2. பெருநகர சென்னை மாநகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம், 3. தாம்பரம் மாநகராட்சி, 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர் ச.ஜெயபிரதீப், 4. உசிலம்பட்டி 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் க.சகுந்தலா” ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.