/tamil-ie/media/media_files/uploads/2022/11/Secretariate.jpg)
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக 4 கவுன்சிலர்களை நீக்கம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் மாநகரட்சிகளில் 3 கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக மொத்தம் 4 கவுன்சிலர்களை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சியின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை மாநகராட்சியின் 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சியின் 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “நமது மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998-ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்டதாக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந் தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு அச்சட்டத்தின் பிரிவு 52-ன் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
1. பெருநகர சென்னை மாநகராட்சி 189-வது வார்டு உறுப்பினர் வ.பாபு, 2. பெருநகர சென்னை மாநகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம், 3. தாம்பரம் மாநகராட்சி, 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர் ச.ஜெயபிரதீப், 4. உசிலம்பட்டி 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் க.சகுந்தலா” ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.