கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 98 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படு என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று பரவல் அடிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"