Advertisment

அம்பேத்கர் நூல்களைத் தமிழில் மலிவு விலையில் வெளியிட தமிழக அரசு திட்டம்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் நூல்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் நூல்களாக வெளியிடத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dr Ambedkar

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் நூல்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் நூல்களாக வெளியிடத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் நூல்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் நூல்களாக வெளியிடத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
Advertisment
சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் சிற்பி, புரட்சியாளர் என்று போற்றப்படுகிறார். டாக்டர் அம்பேத்கர் சட்டத்துறையில் மட்டுமில்லாமல், இலக்கியம், மொழி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், மானிடவியல், சமயவியல் என பல துறைகளில் தேர்ந்த அறிஞராக இருந்தார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள், அவருடைய அரசியல் கருத்துகள், அவருடைய தொலைநோக்குப் பார்வை இன்றைய நவீன பன்மைத்துவ இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படுகிறது. அந்த வகையில், பாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள் சிந்தனைகள், பேச்சுகள் உள்ளிட்ட படைப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை. 
டாக்டர் அம்பேத்கர் எழுதியவைகள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில அவரது கையெழுத்துப் படிகளில் இருந்து பின்னர் நூல்களாக வெளியிடப்பட்டன.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங்கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய சபையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் அளித்த  விடைகளாகவும் அரசுப் பதிவேடுகளிலேயே புதைந்து கிடந்தன.
இவற்றுடன் அவர் எழுதி வெளிவந்த பத்திரிகைக் கட்டுரைகளையும் சேர்த்து வசந்த்மூன் தொகுத்து 1979-ல் மராட்டிய மாநில அரசு, ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது. மராத்தியிலும் இந்த நூல்கள் வெளியிடப்பட்டன.
அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி, மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், தமிழ்நாட்டில் நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து, இந்த 37 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்து 37 தொகுதிகளாக வெளியிட்டது.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தமிழ்மொழி பெயர்ப்புகள் மிகவும் இறுக்கமான நடையில் வாசிக்கக் கடினமாக இருப்பதாக கூறப்பட்டது. அதனால், அம்பேத்கரின் படைப்புகளை இக்காலச் சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியாக தலைப்பில், எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிற மொழிக் கலப்பின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட உள்ள புதிய பதிப்பில் அம்பேத்கர் படைப்புகளில் இடம்பெற்றுள்ள, மணிப்பிரவாள நடையை விடுத்து, தற்காலத் தமிழுக்கு ஏற்ப மாற்றியும், படைப்புகளைப் பொருளடைவு, கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ என்ற புதிய தலைப்பில் 60 தொகுதிகளாகத் தமிழ் வளர்ச்சித் துறையுடன் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த சூலுர் பாவேந்தர் பேரவைத் தலைவர் புலவர் செந்தலை ந. கவுதமன், எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்கக மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் தலைமையில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான வழிவகைகள் முடிவு செய்யப்பட்டன.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கருத்துகளின் பொருள் மாறுபாடு தவிர்த்தல்; எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் உரிய தகுதி வாய்ந்த மாற்றங்களைச் செய்தல்; இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல்; பிறமொழிக் கலப்பினை அகற்றுதல்; உலக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயலாற்றவும், தொகுதிகளில் இடம்பெறும் அருங்கலைச் சொற்கள் மற்றும் அக்கால வழக்குச் சொற்கள் ஆகியவற்றைத் தொகுதியின் இறுதியில் சேர்க்கப் பெறலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் ஆக்கங்களில் இதுவரை அச்சில் வெளிவராத, நூல் வடிவில் கிடைக்கப் பெறாத பிற அரிய செய்திகளையும் கண்டறிந்து, அவற்றையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடவும், அம்பேத்கரின் ஒளிப்படங்களை பல்வேறு பருவங்களின் அடிப்படையில் அமைத்து அந்தந்த தொகுதிகளில் வெளிவரவும், ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப் பெறும் வகையிலும், அடக்க விலையைவிடக் குறைவான விலையாகத் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 100/-க்கு மிகாமல் விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி , பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில், முதல் 10 புத்தகங்களை வெளியிடுவதென்றும் தொடர்ந்து, அடுத்தடுத்த நூல்களைக் கொண்டுவரத் திட்டமிட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment